முயலும் ஆமையும்


ஒரு காட்டில் பல மிருகங்கள் வசித்து வந்தன. அங்கு வசித்து வந்த முயலுக்கு கர்வம் அதிகம். அது தானே இக்காட்டில் வேகமாக ஓடுவேன் என்ற கர்வம் வந்தது.

ஒருநாள் காட்டில் ஒரு விளையாட்டுப் போட்டி நடந்து கொண்டிருந்தது. அப்போது முயல் மெதுவாக நகரக்கூடிய ஆமையிடம் ஏளனமாக தன்னுடன் ஓட்டப் பந்தயத்திற்கு வருமாறு கேட்டது. முதலில் இல்லை எனக்கூறிய ஆமை முயலின் கர்வத்தை அடக்க வேண்டுமென நினைத்து போட்டிக்கு சம்மதம் தெரிவித்தது.

பல மிருகங்களுக்கு இடையில் போட்டி ஆரம்பமானது. தூரத்தை தீர்மானித்த பின் ஓட்டப் பந்தயம் துவங்கியது.

முயல் ஆமையை விட பன்மடங்கு வேகத்தில் ஓடியது. ஆமையோ மனம் தளராமல் தன்னுடைய பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்தது.

முக்கால்வாசி தூரம் வேகமாக ஓடிய முயல் வழியில் ஒரு அற்புதமான சோலையைக் கண்டதும் நிதானித்தது. சிறிது நேரம் ஓய்வெடுத்து பின்பு ஓடலாம் என நினைத்து ஒருமரத்தின் கீழ் உறங்கியது.

வெகு நேரம் கழித்து நம்பிக்கையின்றி அந்த வழியே வந்து கொண்டிருந்த ஆமைமுயல் தூங்கும் காட்சியைக் கண்டு மனதுக்குள் மகிழ்ந்தது.

ஆமையோ மெது மெதுவாக முயல் தூங்கிய தூரத்தைக்கடந்து முடிவுக்கோட்டை நெருங்கியது. அந்த நேரம் தூக்கம் கலைந்த முயல், ஆமை எல்லையை நெருங்கியதை கண்டு ஓட்டம் பிடித்தது. எனினும் ஆமை வெற்றி இலக்கை அடைந்தது.

ஆமையை கண்டு முயல் வெட்கித் தலைகுனிந்தது.

நீதி: நிதானம் அலட்சியத்தை வெல்லும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *